பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Tamil Nadu government announces 6-day holiday for Pongal festival from 14th
4.1.2025
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் தொடர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு, கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜனவரி 17-ந்தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25-ந்தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய் கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பல தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.