சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி
1 min read
9 Indians killed in road accident in Saudi Arabia
30.1.2025
சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்தில் மொத்தமாக 15 பேர் உயிரிழந்தனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறோம். இந்த விபத்து குறித்து தகவலை தெரிந்து கொள்வதற்காக, உதவி எண்களை வெளியிட்டுள்ளோம்,’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனையை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் இந்திய தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் தேவையான முழு உதவிகளை செய்து கொடுப்பார் என்றார்.