வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் முதியவர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
1 min read
Elderly Muslim man attacked for supporting Waqf Bill; 3 arrested
4.4.2025
உத்தர பிரதேசத்தில் வக்ப் மசோதாவை ஆதரித்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. இரு அவைகளிலும் காரசார விவாதங்களுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, வக்ப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுயளித்திருந்தார்.
இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விரைவில் சட்டமாக்கப்பட இருக்கிறது. இந்த மசோதாவுக்கு முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், உத்தரபிரதேசம் சாம்பல் மாவட்டத்தில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும், பா.ஜக., ஆதரவாளருமான முதியவர் ஷாகித் ஷயிப்பி, வக்ப் வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,மசூதியில் தொழுகையை நடத்தி முடித்து விட்டு வெளியே வந்த ஷாகித் ஷயிப்பி மீது கத்தி, கம்புகளை வைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘தொழுகை நடத்தி முடித்து விட்டு மசூதியை விட்டு வெளியே வந்தேன். அப்போது, என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர். நீ ஒரு முஸ்லிம் அல்ல, ஆனால், நீங்கள் ஹிந்துவாக மாறி விட்டீர்கள் எனக் கூறினார்கள்,’ என்றார்.
மேலும், அவர் பேசுகையில், ‘வக்ப் வாரிய மசோதா நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது.வக்ப் வாரிய சொத்துக்களை சட்டவிரோதமாக தின்பவர்களுக்கு இனி சிக்கல் தான். ஏழைகள் அவர்களின் உரிமையை பெற முடியும். இது ஒரு போராட்டம், அதன் காரணமாகவே நான் தாக்கப்பட்டுள்ளேன்,’ எனக் கூறினார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரிஷ்வான், நவ்ஷாத் மற்றும் ஷோயாப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், வக்ப் மசோதாவை ஆதரித்ததற்காக, தனக்கும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல் வருவதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.