நீலகிரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
1 min read
Tight security in Nilgiris district
24.4.2025
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை மற்றும் நாளை மறுநாள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது.
மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.இந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார்.
இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.35 மணிக்கு கோவைக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார்.
பின்னர் அவர் காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ஊட்டியில் நடக்க உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை ஊட்டி வருகிறார்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், சட்டத்தை மீறியும் துணை வேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகம் துணை வேந்தர்கள் மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரை கண்டித்து ஊட்டி ராஜ்பவனை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி ராஜ்பவன், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்துக்காக வருபவர்களை அந்தந்த இடங்களிலேயே கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.