ராணுவ அதிகாரி சோபியா குரேஷியின் கணவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
1 min read
Heavy police security at the home of Army officer Sophia Qureshi’s husband
15.5.2025
பாகிஸ்தான் அடாவடிக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது பற்றியும், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்தியாவின் வெற்றி குறித்தும் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தார். இதன் மூலம் அவர் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமானார்.
ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா கொத்தனூரை சேர்ந்த தாஜூதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாஜூதீனும் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வருகிறார். கொத்தனூரில் தாஜூதீனின் தந்தை ஹவுஸ் ஷாப் பாகேவாடி மற்றும் அவரது மனைவி வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சோபியா குரேஷியின் கணவர் வீட்டை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும், இதனால் அங்கிருந்த குடும்பத்தினர் வேறு பகுதிக்கு இடம் மாறி சென்றுவிட்டதாகவும் அனீஸ் உதீன் என்பவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் கணவர் வீடு தாக்கப்படவில்லை என பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர் குலேத் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எக்ஸ் தளத்தில் ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷியின் கணவர் வீடு தாக்கப்பட்டதாக தகவல் வெளியான உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ராணுவ அதிகாரியின் கணவர் வீட்டை யாரும் தாக்கவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சர்ச்சைக்குரிய பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இதுபோன்ற போலி செய்திகளையும், வதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். போலி செய்தி பரப்பிய நபர் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ அதிகாரியின் கணவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோகாக் போலீஸ் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.