June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

யார் அந்த சார்?- நயினார் நாகேந்திரன் கேள்வி

1 min read

Who is that sir? – Nainar Nagendran asked

4.6.2025
”அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார்? என்ற பதிலுக்காக காத்திருப்போம்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வராத பல விஷயங்கள் உள்ளன என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க., அரசோ அவர்களின் வக்கீலை வைத்துக்கொண்டு, “சார்” பற்றியெல்லாம் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என்று மிரட்டினால், விசாரணையில் உள்ள குளறுபடிகளை மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்தது.
எங்கள் சந்தேகமானது, நீதிபதி அளித்த தீர்ப்பின் மீதல்ல, தமிழக காவல் துறையாலும், அரசு வழக்கறிஞர்களாலும் நீதிபதியின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கின் ஆவணங்களை பற்றியும் விசாரணையின் முழுமைத் தன்மையை பற்றியும் தான். இன்று எங்கள் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக முக்கியமான பல கேள்விகளை ஆதாரத்தோடு கேட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மீண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன். யார் அந்த சார்?

  • டிசம்பர் 24ம் தேதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்?
  • டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் யார்?
  • சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், தி.மு.க., வட்ட செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம், அண்ணா பல்கலை ஊழியர் நடராஜன் ஆகியோரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை?
  • குற்றவாளி ஞானசேகருக்கும் இவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களும், மற்ற தொடர்புகளும் நீதிமன்றத்திலாவது சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா?
  • பாதிக்கப்பட்ட பெண்ணை கொடுக்க வேண்டாமென போலீசாரே தடுத்தது ஏன்?
  • அதையும் மீறி துணிச்சலாக புகாரளித்த அந்தப் பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டது ஏன்?
  • மே மாதம் 16ம் தேதி போடப்பட்ட எப்ஐஆர்-ன் விவரங்கள் என்ன? இன்னும் எத்தனை பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்? பதிலுக்காக காத்திருப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம் உறுதி

திருநெல்வேலியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., எத்தனை பெட்டிகள் பணம் கொடுத்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது சரியில்லை. ‘யார் அந்த ‘சார்’ என்பதே எங்களுடைய கேள்வி.

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிவரும். குற்றப்பத்திரிகையை சரியாக தாக்கல் செய்தால் தான் நீதி கிடைக்கும். போலீசார் தங்களது பணியைச் செய்வதே இல்லை. போலீசார் தமிழக அரசின் ஏவல் துறையாக மாறிவிட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு பாலியல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் எல்லாம் ஏன் 157 நாட்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை? முதல்வர் ஏன் இதில் அக்கறை காட்டவில்லை? அவ்வாறு எல்லா வழக்குகளிலும் துரித விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கினால், முதல்வர் முறையாகப் பணியாற்றுகிறார் என நினைத்துக் கொள்ளலாம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *