Ladakh Lieutenant Governor meets Buddhist leader Dalai Lama and receives blessings 19.7.2025 ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிதாக கவர்னர்களை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன்படி, கோவா, அரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதன்படி, கோவா மாநில கவர்னராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டார். அரியானா மாநில கவர்னராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டார்.
லடாக் யூனியன் பிரதேச கவர்னராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டார். ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேச கவர்னரான கவீந்தர் குப்தா, திபெத்தின் புத்த மத தலைவரான 14-வது தலாய் லாமாவை சந்தித்து பேசினார். அவருடைய ஆசிகளையும் பெற்றார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், அமைதி மற்றும் இரக்கம் ஆகியவற்றின் உலகளாவிய அடையாளமாக திகழும் புத்த மத தலைவரான தலாய் லாமாவை சந்தித்து பேசினேன். இந்த புதிய பொறுப்பில் மதிப்பு மிகுந்த இரக்கம் மற்றும் சேவையை நான் கடைப்பிடிப்பதற்கு, அவருடைய ஆசிகள் எனக்கு சக்தி அளிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.