அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்
1 min read
Actor Prakash Raj appears at the Enforcement Directorate office
30.7.2025
ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஜீட் வின், பரிமேட்ச், லோட்டஸ் 365 உள்ளிட்ட சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. மேலும், பிரபல நடிகர்களின் விளம்பரங்களை நம்பி, சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஒருவர் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரகாஷ் ராஜ் இன்று ஆஜரானார். பிரகாஷ் ராஜ் தவிர, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராணா டகுபதி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டதால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.