நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Supreme Court orders Election Commission to release details of 6.5 million deleted voters
14.8.2025
மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்கு திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது.
அப்போது வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நீக்கப்பட்டவர்களின் பெயர்களை இணையதளத்தில் வெளியிடலாமே? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு வாக்காளர்களின் தனியுரிமை பாதுக்காக்கப்பட வேண்டும் எனவும், சில முடிவுகளை எடுக்க எங்களுக்கும் அதிகாரம் உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை 3 நாட்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், நீக்கப்பட்ட காரணத்தை தெளிவாக குறிப்பிடுவதோடு, மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.