கோகுலாஷ்டமி – ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
1 min read
Gokulashtami – Greetings from President, Prime Minister
16.8.2025
அகிலத்தில் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக விஷ்ணு பகவான் யது வம்சத்தில் கிருஷ்ணராக அவதரித்து, பின்னர் கோகுலத்தில் யசோதனியின் மகனாக வளர்ந்து, கம்சனை வதம் செய்தார். கிருஷ்ணர் அவதரித்த தினமான, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் அஷ்டமி திதியுடன் கூடிய நாள், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஸ்ரீகிருஷ்ணர் முழு மனிதகுலத்திற்கும் தர்மத்தின்படி கடமையை செய்வதற்கான வழியையும், அனைத்து உயிரினங்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதையும் நமக்கு காட்டியுள்ளார். இந்த நாளில் அனைவரும் கிருஷ்ணர் காட்டிய பாதையை பின்பற்றுவோம் என்றும், சமூகத்தையும், நாட்டையும் வலுப்படுத்துவோம் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல், பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். இந்த புனிதமான பண்டிகை அனைவரின் வாழ்விலும் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை கொண்டு வரட்டும். ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!” என்று பதிவிட்டுள்ளார்.