மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு-எடப்பாடி பழனிசாமி கண்டனம்
1 min read
Edappadi Palaniswami condemns death of woman after falling into rainwater drainage ditch
3.9.2025
சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1-வது தெருவில் உள்ள மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூளைமேடு போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கயிறு கட்டி உடலை மீட்டு கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபா (வயது 42) என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பெண், மூடப்படாமல் இருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலை மற்றும் முகத்தில் அடிபட்டும், பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், பள்ளத்தில் விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதால் தீபாவின் உயிர் பிரிந்ததாகவும், நள்ளிரவு 12.30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து, சுமார் 1 மணியளவில் உயிர் பிரிந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக் தி.மு.க. அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட தமிழக அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை, மழைநீரும் வடிந்த பாடில்லை, அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.