எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்
1 min read
Edappadi Palaniswami is going to Delhi.
14.9.2025
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்கள் அனைவரும், அ.தி.மு.க.வில் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது, காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 16-ந்தேதி (நாளை மறுநாள்) டெல்லிக்கு செல்ல உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.