தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
1 min read
Maoist shot dead with Rs. 1 crore reward on his head
16.9.2025
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாத் மாவட்டம் பண்டிட்ரு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று காலை அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினர் நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடி தாக்குதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சகாதேவ் சோரன் என்ற மாவோயிஸ்டும் அடக்கம் என தெரியவந்துள்ளது. மேலும், என்கவுன்டர் நடைபெற்ற பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.