பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை தொடங்கியது
1 min read
BSNL 4G service launched
27.9.2025
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை இன்று முதல் தொடங்கியது. ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 4 ஜி சேவையை தொடங்கிவைத்தார். ஏற்கனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4 ஜி சேவை பிஎஸ்என்எல் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், 29 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கிராமங்களுக்கு 100 சதவீத 4ஜி சேவை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 180 4ஜி வலை பின்னல் கோபுரங்களை பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார்.
இதன் மூலமாக குறைந்த கட்டணத்தில் 120 கோடி வாடிக்கையாளர்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி அழைப்பு சேவைகளை வழங்கி வரும் நாடாக இன்று இந்தியா உருவெடுக்கவுள்ளது. இதனால், 5ஜி சேவையையும் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்த முடியும். இந்த 4ஜி சேவையுடன், டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க்கையும் அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு ‘4G’ சேவைகளைத் தொடங்கிய உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் வாயிலாக இந்தியா உலகளாவிய தொலைதொடர்பு உற்பத்தி மையமாக மாறும்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மக்களை கவரும் விதமாக ரூ.225க்கு 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.25 ஜிபி ‘4G’ டேட்டா திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது.