June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கரூருக்கு சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை?-மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

1 min read

Why didn’t you go to Kallakurichi after going to Karur? – EPS attacks MK Stalin

3.10.2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.
கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்!
கரூர் சம்பவத்தின்போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் பொம்மை முதல்வரே…

நான் கேட்கிறேன்-

வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா?
ஆட்சி நிர்வாகத்தில் பெயிலியர்(தோல்வி)

நிதி நிர்வாகத்தில் பெயிலியர்,

சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பெயிலியர்,

பெண்கள் பாதுகாப்பை உறுதி

செய்வதில் பெயிலியர்,

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பெயிலியர்,

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் பெயிலியர்,

என மக்களை நாள்தோறும் வாட்டி வதைக்கும் உங்கள் பெயிலியர் மாடல் திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே ,

எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை!

உங்கள் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்களின் நலனும், மாணவர்களின் எதிர்காலமும், பெண்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்பதே எங்கள் கூட்டணிக்கான பொதுக் காரணம்!

இதை விட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படைக் காரணம் தேவையா என்ன?

உங்களைப் போல் அல்லாமல், “கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு” என்று நான் மக்களோடு தான் இருக்கிறேன் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். அதற்கு நன்றி.

உங்கள் ஆட்சியின் தவறுகளைச் சொன்னால், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினால், அதிலும் நீங்கள் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அது உங்கள் கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்வது ?

சரி… பயப்படுறீங்க… இருக்கட்டும்!

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *