சென்னையில் மழைநீர் வடிகால் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
1 min read
Chief Minister M.K. Stalin personally inspects rainwater drainage work in Chennai
5.10.2025
சென்னை தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-118, டி.டி.கே சாலை ஆழ்வார்பேட்டை யில் மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி, 200 மீட்டர் நீளத்திற்கு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
வீனஸ் காலனி 1வது தெரு, 2வது தெரு, சீமான் சீனிவாசன் தெரு, வரதராஜபுரம் பிரதான சாலை, கஸ்தூரி எஸ்டேட் 1-வது தெரு, சேஷாத்திரி தெரு மற்றும் முரேஷ் கேட் சாலை ஆகிய தெருக்களில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம் ஏற்படுவதால் மேற்குறிப்பிட்ட தெருக்களில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காவண்ணம், ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை குறுக்கு தெரு, இளங்கோ சாலை, போயஸ் ரோடு, வெங்கட ரத்தினம் சாலை, ராஜ கிருஷ்ணா ரோடு, நல்லான் போயஸ் ரோடு, வரதராஜ புரம் பிரதான சாலை, ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் ரோடு மற்றும் டி.டி.கே. சாலை ஆகிய 10 தெருக்களில் மழை நீர் வடிகால்கள் சுமார் 2.16 கிமீ நீளத்திற்கு 8.21 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழையையொட்டி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பணிகளை மிக விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர் மா. சுப்பிரமணியன், எழிலன் எம்.எல்.ஏ., மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் சிற்றரசு, ஆணையர் குமரகுருபரன், குடிநீர் வாரிய இயக்குநர் வினய் உடனிருந்தனர்.