இலஞ்சியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
1 min read
Diwali Khadar special discount sale in Ilanji – inaugurated by the District Collector
6/10/2025
தென்காசி செங்கோட்டை ரோடு, இலஞ்சியில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் அண்ணல் காந்தியடிகளின் 157- வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், பேசியதாவது:-
உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் தென்காசி கதர் அங்காடி (இருப்பு) இலஞ்சி பாவூர்சத்திரம் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் 2 கிராமிய நூற்பு நிலையங்களும், கீழப்பாவூரில் கதர் உபகிளையும் செயல்பட்டு வருகிறது. 2 கிராமிய நூற்பு நிலையங்களில் 31 கதர் நூற்பாளர்களுக்கும் மற்றும் கீழப்பாவூர் மற்றும் சங்கரன்கோவிலில் கதர் நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வலுவலக கட்டுப்பாட்டில் 9 வாரிய தொழிற் கூட்டுறவு சங்கங்களும், 7 பனைவெல்ல கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்பட்டும், உத்தமர் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைபிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தமர் காந்தியடிகளின் 157வது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் 02.10.2025 முதல் கதர் சிறப்பு விற்பனை காலம் முடியும் வரை தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் செயல்படும். மேலும், தரமிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள். பட்டு துண்டுகள். கதர்வேஷ்டிகள், துண்டு ரகங்கள். ரெடிமேட் சட்டைகள், இலவம் பஞ்சினால் ஆன மெத்தை, தலையணைகள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களும், சுத்தமான அக்மார்க் தேன். குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களும் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளினால் கதர் ரகங்களுக்கு 30%-ம், உல்லன் ரகங்களுக்கு 20%-ம் ஆண்டு முழுவதும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
அரசு துறைகளில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு அவர்களது மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி பண்டிகை காலம் வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடிகள் செயல்படும்.
2025-2026ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ.82.55 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை பெருமளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், குடிசைத் தொழில் ஆய்வாளர் (நிலை-2) பா.பாலசுப்பிரமணியன். கதர் அங்காடி மேலாளர், சு.ஜாண் சாமுவேல், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், துணைத் தலைவர் மு. முத்தையா, அருணாதேவி மற்றும் முதல் விற்பனையாளர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்