கடையம் அருகே தம்பி வெட்டிக் கொலைஅண்ணன் உட்பட 2 பேர் கைது
1 min read
Brother hacked to death near kadayam – 2 people including brother arrested
தென்காசி மாவட்டம் கடையம் மயிலப்புரம் அருகே உள்ள ராஜாகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரின்சிபால். இவரது மகன் வினோத்கனி (வயது 42) மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு ஏஞ்செல் என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா, அவரது மகன் மேசியா சார்லஸ் (வயது 45). செல்லப்பாவும், பிர்ன்சிபாலும் உடன்பிறந்த அண்ணன் தம்பி ஆவர்.இருவருக்கும் அப்பகுதியில் சொந்தமாக இடம் உள்ளது. இந்நிலையில் வினோத்கனி, சார்லஸுக்கு சொந்தமான இடத்தில் நெல் களம் வைத்துள்ளார். அதேபோல் சார்லஸ் வினோத்கனிக்கு சொந்த மான இடத்தில் பன்றிப் யண்ணை வைத்துள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வினோத் கனி தனக்கு சொந்தமான இடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் ஜேசிபி மூலம் பன்றி பண்ணையை இடித்து விடுவதாகவும் மேசியா சாரலஸை மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மேசியா சார்லஸ் நேற்று மாலையில் பன்றி பண்ணை அருகே நின்று கொண்டிருந்த வினோத்கனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வினோத்கனியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது வினோத்கனி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மேசியா சார்லஸை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடையம் அருகே உள்ள புலவனூர் ராஜுவ் காலனி பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரது மகன் ஆறுமுகம் (வயது 23) என்பவர் கடையம் காவல் நிலையத்தில் தான் வினோத்கனியை வெட்டி கொலை செய்ததாக கூறி சரண் அடைந்துள்ளார்.
இதனால் குழப்பம் அடைந்த போலீசார் சரண் அடைந்த ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேசியா சார்லஸை கைது செய்தனர். அப்போது இருவரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வினோத்கனியை வெட்டிக்கொலை செய்தது மேசியா சார்லஸ் தான் என்பதும் அவருக்காக அவரது பன்றி பண்ணையில் வேலை பார்க்கும் ஆறுமுகம் தனது முதலாளியை காப்பாற்றும் வகையில் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததும் தெரியவந்தது.
உடனடியாக கடையம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.