தென்காசி மாணவ-மாணவிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்
1 min read
Tenkasi students discuss with ISRO scientists
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மூன்று கட்ட சோதனைக்கு பிறகு விரைவில் செயல்படுத்தப்படும் என்று தென்காசியில் இஸ்ரோ விஞ்ஞானி பேட்டி அளித்தார்.
சர்வதேச விண்வெளி வார விழாவானது வருகின்ற அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமானது நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் தேன்பொத்தை பகுதியில் உள்ள ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இஸ்ரோ மூலம் மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி குறித்த கண்காட்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, இந்நிகழ்வின் போது சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷி சுக்லா மற்றும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர்ஜாஜி உள்ளிட்ட முக்கிய விஞ்ஞானிகள் காணொளி வாயிலாக விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்தும், இஸ்ரோ மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் அது தொடர்பான பயன்பாடுகள் குறித்தும் மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடினா.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ஜாயாஸ் ஜோஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது :-
இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டமான விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மூன்று கட்ட சோதனை களுக்குப் பிறகு அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, மனிதன் விண்ணுக்கு அனுப்பப் படுவான் எனவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரோவின் அடுத்த கட்ட பெரிய திட்டமான விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நிறுவப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.