நீர்மட்டம் உயர்ந்ததால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
1 min read
Water released from Mullaperiyar dam due to rising water level
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும்.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.25 அடியாக உயர்ந்தது.
அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 163 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர்திறப்பை அடுத்து பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.