எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்த 5 மாதத்தில் பதவி உயர்வு பெற்ற பெண்
1 min read
Woman promoted within 5 months of joining Border Security Force
உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை சேர்ந்தவர் ஷிவானி. நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.) கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்த அவர், தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பணியில் சேர்ந்த 5 மாதங்களில் அவர் பதவி உயர்வு பெற்றிருப்பது 60 வருட கால பி.எஸ்.எப். வரலாற்றில் முதன்முறையாகும். இந்தியாவின் மத்திய ஆயுத போலீஸ் படையில் இதுவரை இல்லாத சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
பிரேசில் நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை நடந்த 17-வது உலக வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அவர் வெள்ளி பதக்கம் வென்றார். இதனையடுத்து அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இவருடைய தந்தை தச்சு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி பதவி உயர்வை வழங்கி கவுரவித்து உள்ளார். நடப்பு ஆண்டின் ஜூலை 18-ந்தேதி பி.எஸ்.எப். கான்ஸ்டபிள் அனுஜ் என்பவருக்கு தலைமை கான்ஸ்டபிள் என்ற பதவி உயர்வை வழங்கினார். அவர், சீனாவின் ஜியான்ஜின் நகரில் நடந்த 10-வது சான்டா உலக கோப்பை வுசு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இதற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.