June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

வீட்டுவசதி வாரியம்: பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் வழங்கினார்

1 min read

Appointment orders for those selected for Housing Board posts – Chief Minister issued

1.11.2025
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.11.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர் / உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய்ப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது. மேலும், தற்போது இவ்வாரியம் பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 36 தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர் ஊரமைப்பு இயக்ககம், நகர்ப்புற திட்டமிடல், நிலப்பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 24 அளவர் / உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *