தென்காசி: பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
1 min read
Tenkasi: Student dies after fainting on way to school
8.12.2025
தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சங்கரம்மாள். இந்த தம்பதிக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், சிவா என்ற மகனும் இருந்தனர். கிருஷ்ணவேணி ஆலங்குளத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு இதய பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகள் எடுத்து வந்தார்.
இந்நிலையில், மாணவி கிருஷ்ணவேணி இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தார். பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து , பாடப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டு வாசலிலேயே கிருஷ்ணவேணி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.