மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்: மு.க.ஸ்டாலின் உறுதி
1 min read
We will form a Dravidian Model 2.0 government with the support of the people: M.K. Stalin assures
8.12.2025
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் (எஸ்.ஐ.ஆர்.) ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின்மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன். நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம்’ என்று பேசினார்.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க எஸ்.ஐ.ஆர். பணிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு உதவிய கழகத்தினரைப் பாராட்டுகிறேன் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வரையிலும் நமது பணி முழுமையடையாது.
தொடர்ந்து மக்களைச் சந்தித்து, நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளைச் சொல்லி, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என அவர்களது துணையுடன் மக்களாட்சியைக் காப்பாற்றுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.