மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி – துரைமுருகன் பேச்சு
1 min read
Udhayanidhi – Duraimurugan’s speech in response to the question of who will be next to M.K. Stalin
14.12.2025
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க. தலைவர் மற்றும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் வெற்றி வாக்குச் சாவடியாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இளைஞர் அணி செயலாளரும் துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடத்தியது போல, தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாட்டை திருவண்ணாமலையில் இன்று நடத்தினார். இதில் 91 தொகுதிகளைச் சேர்ந்த 1.5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
சிறிய அளவில் நண்பர்களோடு அமர்ந்து ஆரம்பிக்கப்பட்டது திமுக இளைஞரணி. இப்போது பரந்து விரிந்து ஆலமரமாக மாறியிருக்கிறது. பேசுவதை விட இந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.
அண்ணாவின் புகழ் வரிசையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியை மிஞ்சும் புகழ் வரிசையில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
மு.க. ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி. திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. வலுவான தலைமை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.