இந்தியாவுக்கு எதிரான பேச்சு: வங்கதேச தூதருக்கு மத்திய அரசு சம்மன்
1 min read
Anti-India speech: Central government summons Bangladesh ambassador
18.12.2025
வங்கதேச நாட்டில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து, அந்த நாட்டுடன் இந்தியாவுக்கான சுமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா, “பிரிவினைவாத மற்றும் இந்தியா எதிர்ப்பு சக்திகளுக்கு தங்குமிடம் அளிப்போம். அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இந்தியாவில் இருந்து துண்டிக்க வங்கதேசம் உதவும். இந்தியாவின் இறையாண்மை, மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு (ஷேக் ஹசீனா) இந்தியா தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் அதற்கு பதிலடி கொடுக்கும்” என கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு, வங்கதேச தூதர் முகமது முஸ்தாபிஸூருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. அவ்வாறு ஆஜரான அவரிடம் இடைக்கால அரசாங்கம் தனது ராஜதந்திர கடமைகளுக்கு இணங்க வங்கதேசத்தில் உள்ள தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது. மேலும் வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்தியாவின் கடுமையான கவலைகள் தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.