அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது – அன்பில் மகேஷ் எச்சரிக்கை
1 min read
Special classes should not be held during half-yearly holidays – Anbil Mahesh warns
23.12.2025
பள்ளிகளுக்கு 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இதையடுத்து கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய கொண்டாட்டங்களை தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. குறிப்பாக தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பாழடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். புதிய கட்டடம் கட்டப்படுவதால் சமுதாய கூடங்களில் அல்லது வாடகை கட்டிடங்களில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.