2036 ஒலிம்பிக்கை நடத்த இந்தியா முயற்சித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு
1 min read
India is trying to host the 2036 Olympics – Prime Minister Modi’s speech
25/12/2025
குஜராத் மாநிலம் ஜூனகத்தில் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:-
இந்தப் போட்டியில் பங்கேற்ற சில வீரர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களின் உற்சாகம், மன உறுதி, ஆர்வம் ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையின் ஒரு சிறு பார்வையை என்னால் காண முடிந்தது. வீரர்களிடம் இருக்கும் தன்னம்பிக்கை கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அதே நம்பிக்கையை ஊட்டுகிறது. அதனால்தான், ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி, அறிவியல், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் கொடியை உச்சத்தில் பறக்கவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் வெற்றிக்காக மட்டும் விளையாடவில்லை. நீங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள், மூவர்ணக் கொடியின் பெருமைக்காகவும் மரியாதைக்காகவும் விளையாடுகிறீர்கள்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்கள் குழந்தைகளை விளையாட ஊக்குவியுங்கள், அவர்களுக்கு விளையாடுவதற்கு வாய்ப்புகளை வழங்குங்கள். ஏனென்றால் விளையாட்டு கற்றலின் ஒரு பகுதி மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கும், மனதிற்கும் ஒரு அத்தியாவசியமான தேவையுமானது.
இன்று விளையாட்டுகளில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை வரம்பற்றவை. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகூட இளம் வயதிலேயே உச்சத்தை அடைய முடியும்.
வரும் ஆண்டுகளில் இந்தியா பல முக்கிய விளையாட்டுகளை நடத்த இருக்கிறது. 2030-ல் அகமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. உங்களை போன்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
மேலும் 2036-ல் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கும் இந்தியா முயற்சி செய்து வருகிறது.
இன்று 10 அல்லது 12 வயது இளைஞர்கள்தான் 2036 ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள். அவர்களை நாம் இப்போதே கண்டறிந்து, வளர்த்து, தேசிய அரங்கிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு என்றார்.