June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்வோம்; அமைச்சர் ரகுபதி பேட்டி

1 min read

We will appeal in the Thiruparankundram case; Interview with Minister Raghupathi

6.1.2026
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: –

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாவட்ட கலெக்டர் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுகிற வழக்கம் என்பது தமிழகத்தில் கிடையாது.

தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என்று மேல் முறையீட்டில் மாவட்ட நிர்வாகம் கேட்டு இருந்தார்கள். இன்றைக்கு நீதிபதிகள் பொதுமக்களுக்கு மட்டும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் தலைமையில், சிலர் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சட்டத்திற்கு புறம்பான உத்தரவுகளை தந்து இருக்கிறார்கள்.
பொதுவாகவே ஒரு இடத்தில் ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று சொன்னால், அந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால், நீதிபதிகள் இதற்கு முன் ஏற்கனவே தீபம் ஏற்றி இருக்கிறார்கள் என்று, அதற்கான ஆதாரங்களை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நாங்கள் இன்றைக்கு அனுமதி தருகிறோம் என்று சொல்ல வேண்டும். எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது. இதுவரை எந்த காலகட்டத்திலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை.

நீதித்துறையை களங்கபடுத்த முடியாது. சட்டத்திற்கு புறம்பான செயல் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எங்களுக்கு முழு உரிமையும் உண்டு. தமிழர்களின் கலாசாரம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.

யாரோ ஒருவர் கேட்டதால் அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்வது முழுக்க முழுக்க தவறு.
இதுவரை இல்லாத பழக்கத்தை, இதுவரை இல்லாத வழக்கத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக உள்ளே நுழைப்பது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரானது.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *