கரூர் சம்பவம்: விஜய் 12-ந் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
1 min read
Karur incident: CBI summons Vijay to appear in person on the 12th
6.1.2026
கரூர் நெரிசல் சம்பவம் வழக்கில், தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கரூர் கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரை, டில்லிக்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
அதேபோல, த.வெ.க., முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது, கரூர் சம்பவத்தில், 41பேர் உயிரிழந்தற்கான காரணங்கள் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் தவெக நிர்வாகிகள் குற்றம் சுமத்தி இருந்தனர்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, தவெக தலைவர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் ஜனவரி 12ம் தேதி விஜய் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகள் சம்மனில் குறிப்பிட்டு உள்ளனர்.