காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துவதா? – அண்ணாமலை கண்டனம்
1 min read
He is threatening teachers by invoking the police – Annamalai
11.1.2026
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத போக்குக்கு எடுத்துக்காட்டு.
ஆட்சிக்கு வருவதற்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என திமுக கொடுத்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் குரலை அடக்கலாம் என்று நினைப்பது வெட்கக்கேடு. ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி.
உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.