ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
1 min read
Former Reliance chairman arrested in Rs 40,000 crore bank fraud case
31.1.2026
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி மற்றும் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், நிதி திசை திருப்பல்களில் ஈடுபட்டதால் அது மோசடியாக வரையறுக்கப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், இயக்குனருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறையினர் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் கைது செய்யப்பட்டதாக அறிவித்த அமலாக்கத்துறை, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவரை 9 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதித்து உத்தரவிட்டது. 2 நாட்களுக்கு முன்னதாக புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை அமலாக்கத்துறை முடக்கியது.
“புனித் கார்க், 2001 முதல் 2025 ஆண்டு வரை நீண்ட காலமாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாண்மை இயக்குநர் பதவி வகித்தபோது,மேற்கூறிய வங்கி மோசடியிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை கையகப்படுத்துதல், வைத்திருத்தல், மறைத்தல், பல அடுக்குகளாகப் பிரித்தல் மற்றும் சிதறடித்தல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்,” என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.