ஜப்பான் தேர்தலில் சானே தகைச்சி அபார வெற்றி
1 min read
Sane Takaichi wins landslide victory in Japanese election
9.2.2026
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும், தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் தேர்தல் நடத்தும் முடிவை எடுத்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதியளித்தார்.
இதையடுத்து, ஜப்பானிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் நேற்றுமுன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார்.
அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி. இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.