ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறந்தநாள்-தலைவர்கள் வாழ்த்து
1 min read
President Droupadi Murmu’s Birthday – Leaders Extend Wishes
இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
தனது பல ஆண்டுகால பொது வாழ்வில், அவர் தேசத்திற்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்; குறிப்பாக, நலிந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறட்டும். இன்று ஒடிசாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். ஜனாதிபதி திரவுபதி முர்மு, நலிந்த மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, தேச சேவைக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கான அவரது குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட அவரது வாழ்க்கையும் பொதுப் பயணமும், நாடு முழுவதும் எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. தேச சேவைக்குத் தொடர்ந்து பங்களிக்கும் அவர், நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் முர்முவுக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குடியரசுத் தலைவர் முர்முவுக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும், தமது ஞானம், கருணை மற்றும் தேச சேவைக்கான முன்மாதிரியான அர்ப்பணிப்புடன் நமது தேசத்தைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.
திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், இன்னும் பல ஆண்டுகள் நாட்டிற்குப் பொதுச் சேவையாற்றவும் வாழ்த்துகிறேன் என்றார்.
அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில்
இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட, ஆரோக்கியமான வாழ்வையும், நமது மாபெரும் தேசத்தை வழிநடத்துவதில் தொடர்ச்சியான வலிமையையும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.