June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பி பெண்ணிடம் ரூ.8.45 லட்சம் மோசடி – வாலிபர் கைது

1 min read

Youth arrested for defrauding woman of Rs. 8.45 lakh by sending text messages on Instagram

13.2.2026
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராமுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறக்கட்டளை பெயரில் குறுந்தகவல் வந்தது. அந்த பெண் அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், நான் அறக்கட்டளை நடத்தி உதவி செய்து வருகிறேன் என்றும், உங்களுக்கு ரூ.16 லட்சம் கொடுத்து உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் இந்த பணத்தை பெற வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்றார். இதை உண்மை என நம்பிய அந்த பெண், மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தினார். இதை பெற்றுக் கொண்ட அந்த நபர், அவரிடம் மேலும் பணம் செலுத்துமாறு கூறினார். இதை நம்பி அந்த பெண் 58 தவணைகளாக ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் செலுத்தி உள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட பெண் ரூ.16 லட்சத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடைய நகைகளை வங்கியில் அடகு வைத்தும், கடன் வாங்கியும் ரூ.8.45 லட்சத்தை இழந்தது தெரிய வந்தது.

மேலும் மோசடியில் ஈடுபட்டது சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்புசாமி (24 வயது) என்பதும், தற்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 வங்கி புத்தகங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கருப்புசாமி அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி எத்தனை பேரை ஏமாற்றினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *