ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்த ரூ.60 லட்சத்துடன் வேன் டிரைவர் ஓட்டம்
1 min read
Van driver flees with Rs. 60 lakhs from ATM
14.2.2026
ஐதாரபாத் அருகே திருமலகிரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அஜித் குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்ப செல்லும் வாகனத்தை இயக்கி வந்தார். கடந்த வியாழக்கிழமை மதியம் அவர், வழக்கம்போல தனது அலுவலக குழுவினருடன் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக சென்று கொண்டிருந்தார்.
சில தனியார் வங்கி ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை நிரப்பினர். மாலை 4.30 மணிக்கு கோபனபள்ளி பகுதிக்கு வந்தனர். பாதுகாவலர்கள் கொஞ்சம் பணத்துடன் ஒரு ஏ.டி.எம். எந்திரத்தை நிரப்பச் சென்றனர். ஒரு பாதுகாவலர் வேன் அருகே இருந்தார். அவர் சிறுநீர் கழித்து வருவதாக அருகில் சென்ற நேரத்தில், டிரைவர் அஜித் பணத்துடன் வேனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். வேனில் ரூ.60 லட்சம் பணம் இருந்ததாக தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓரிடத்தில் கேட்பாரற்று நின்ற வேனை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அஜித் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.