கப்பல் வாங்கியது பற்றி டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை கோர்ட்டில் கேள்வி
1 min read
Annamalai cross-examines TR Balu: Tight question about ship purchase
16.2.2026
திமுக எம்பி டிஆர் பாலுவிடம் குறுக்கி விசாரணை நடத்திய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கப்பல் போக்குவரத்து துறை மத்திய அமைச்சராக இருந்த போது கப்பல் வாங்கியது பற்றி கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பா.ஜ.க, தலைவராக அண்ணாமலை இருந்தபோது, கடந்த, 2023, ஏப்.,14ல், ‘டி.எம்.கே., பைல்ஸ்’ என்ற பெயரில், பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில்,”தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்’ கூறினார்.
இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (பிப்ரவரி 16) நீதிமன்றத்தில் நடந்தது. ஏற்கனவே வழக்கில் டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அண்ணாமலை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தார்.
இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. அந்தவகையில் டிஆர்பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார். அதன் விபரம் பின்வருமாறு:
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது டிஆர்பாலு 10 கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது தெரியுமா? சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி தனிப்பட்ட பலனை அடைய கப்பல்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்கள் வாங்கினீர்களா? டிஆர்பாலுவிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
நான் 10 கப்பல்களை வாங்கியதாக அழகிரி செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி குறித்து எனக்கு தெரியாது. நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக அழகிரி சொல்வது உண்மை இல்லை. உள்நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை. அழகிரி கூறியது போல், 10 கப்பல்கள் வாங்கவில்லை.
இரண்டு கப்பல்கள் தான் வாங்கினேன் என திமுக எம்பி டிஆர்பாலு பதில் அளித்துள்ளார். இதற்கு, ”10 கப்பல்கள் வாங்கியதாக அழகிரி கூறியது தவறான தகவல் என்றால் ஏன்? அவதூறு வழக்கு தொடரவில்லை” என குறுக்கு விசாரணையில் பல்வேறு கேள்விகளை அண்ணாமலை எழுப்பி உள்ளார்.