ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்
1 min read
90 percent of IAS and IPS officers are from OBC category
18.2.2026
கேரள எம்.பி. ஜான் பிரிட்டஸ், நாட்டில் அகில இந்திய பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் நடந்த நியமனங்களில் இடஒதுக்கீடு வாரியான விவரங்களையும், காலிப்பணியிடங்கள் குறித்தும் மாநிலங்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்.
அதில், 1-1-2025 நிலவரப்படி நாட்டில் 6,877 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 5,099 ஐ.பி.எஸ். பணியிடங்களும், 3,193 ஐ.எப்.எஸ். பணியிடங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,300 ஐ.ஏ.எஸ். பணியிடங்களும், 505 ஐ.பி.எஸ். பணியிடங்களும், 1,029 ஐ.எப்.எஸ். பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களில் தமிழ்நாட்டில் 51 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோல் ஐ.பி.எஸ். பணியிடங்களில் 34-ம், ஐ.எப்.எஸ். பணியிடங்களில் 50-ம் காலியாக உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் (2020–2024) நியமனம் செய்யப்பட்ட இந்த பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் அதிகம் உள்ளனர். ஐ.ஏ.எஸ். பதவியில் இதர பிற்படுத்தப்பட்டோர் 245 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 135 பேரும், பழங்குடியினரில் 67 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எஸ். பதவியில் இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 255 ஆக உள்ளது. தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 141 ஆகவும், பழங்குடியினரின் எண்ணிக்கை 71 ஆகவும் உள்ளது.
ஐ.எப்.எஸ். பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 231 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 95 பேரும், பழங்குடியினர் 48 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சதவீத கணக்கில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரியவந்துள்ளது.