ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்கள் வெளியிட டிரம்ப் உத்தரவு
1 min read
Trump orders release of secret documents on aliens
20.2.2026
அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UAP) குறித்த ரகசிய கோப்புகளை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளி பொருட்கள் (UFO) மற்றும் ஏலியன்கள் குறித்த தகவல்கள் பல ஆண்டுகளாக ரகசிய பட்டியலில் வைக்கப்பட்டிருந்தன. இவை குறித்து நீண்ட காலமாக பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன.
சமீபத்தில், “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்” என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியிருந்ததும் “இதன் மூலம், ஒபாமா பெரிய தவறிழைத்துவிட்டார்” என டிரம்ப் விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால், ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் உள்ளிட்டவை குறித்த அனைத்து அரசு ஆவணங்களையும் தேடி எடுத்து வெளியிட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், ஏலியன்கள் தொடர்பான உண்மை தகவல்கள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.