June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி 9 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு

1 min read

9-fold increase in funding for Tamil Nadu rail projects: PM Modi speech

1.3.2026
மத்திய ரயில்வே பட்ஜெட்டில், தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி 9 மடங்கு அதிகரித்து உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் கவர்னர் ரவி, மத்திய அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் வேலு, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(நகாய்) சார்பில் ரூ.1853 கோடி மதிப்பில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 47 கி.மீ., துாரத்திற்கான நான்குவழிச்சாலை, ரூ.2157 கோடி மதிப்பில் மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கி.மீ., துாரத்திற்கான நான்குவழிச்சாலை திட்டப்பணிகளை காணொலியில் துவக்கி வைத்தார். சீரமைக்கப்பட்ட காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில்வே ஸ்டேஷன்களை திறந்து வைத்தார்.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
இதன் பிறகு பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது: பழம்பெரும் நகரமான மதுரைக்கு வருவதில் பெருமை. மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு தலைவணங்குகிறேன். 4,400 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சில பணிகளை துவக்கி வைத்துள்ளோம். இந்த திட்டங்கள் உள்கட்டமைப்பை வளர்ச்சி அடைய செய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.தமிழக நெடுஞ்சாலை திட்டங்களில் மத்திய அரசு அதிகளவு முதலீடு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2009- 2014 வரையில் ரயில்வே பட்ஜெட்டில் 880 கோடி ரூபாய் ஆக மட்டுமே இருந்தது. 2026 -27 ம் ஆண்டில் இது 7,600 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. 1300 கிமீ., அதிகமான புதிய ரயில்வே வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. மின்மயமாக்கல் பணி 97 சதவீதம் முடிவடைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பாம்பன் ரயில் பாலம் துவக்கி வைத்தோம். இது பொறியியல் சிறப்பு தன்மைக்கு அடையாளம் ஆகும். இந்த பாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது.
9 வந்தே பாரத் ரயில்கள், 9 அம்ரித் பாரத் ரயில் தமிழக மக்களுக்கு சேவை செய்கின்றன. இந்த பெட்டிகள் சென்னையில் தயாராகிறது. மேக் இன் இந்தியா திட்டம் சுயசார்பை வலுப்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது. அம்ரித் பாரத் ரயில் திட்டங்களின் படி 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை துவக்கி வைத்துள்ளோம். சென்னை கடற்கரை எழும்பூர் 4வது வழித்தடம் காரணமாக, சென்னையில் தினசரி பயணிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கும்பகோணம், ஏற்காடு உள்ளிட்டவற்றில் ரேடியோ நிலையங்கள் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி. இது மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளன.
தமிழக உள்கட்டமைப்புக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026 பட்ஜெட்டில் தமிழகத்தின் மீது தனது பலமான கவனத்தை மத்திய அரசு செலுத்துகிறது. இந்த பட்ஜெட்டில் பெங்களூரு சென்னை, சென்னை ஐதராபாத் இடையிலான புல்லட் ரயில் வழித்தட திட்டங்களை முன்வைத்துள்ளோம். இது இ்ந்த பகுதியின் பொருளாதாரத்தை அதிகப்படுத்தும்.
தமிழகம் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்துக்கு சொந்தமான மாநிலம். ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உலகளாவிய மரபுசார் இடங்களாக மேம்படுத்தப்படும். புலிகாட் ஏரி, பொதிகை மலை போன்ற இடங்களை சுற்றி, சுற்றுச்சூழல் சுற்றுலா ஏற்படுத்தப்படும். நாடு முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் இனம் காணப்பட்டு ஊக்கப்படுத்தப்படும். இந்த திட்டம் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

2047 ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வினால், இந்தியர்கள் அனைவரும் உந்தப்பட்டுள்ளனர். நாட்டை கட்டமைப்பதில் தமிழகம் தனது பங்கை ஆற்றும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *