எண்ணெய் வரும் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடல்- ஈரான் நடவடிக்கை
1 min read
Iran’s move to close the Strait of Hormuz, the oil route
3.3.2026
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரானிய ஊடகங்களில் பேசிய அவர் கூறியதாவது:-
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.
இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்.
கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்”
இவ்வாறு அவர் கூறினார்.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.
தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.
கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக இதன் வழியாகவே செய்கிறது. எனவே இவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் தட்டுபாடால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும்.