ஈரானின் சிவப்பு மண்டலத்தில் 1,100 காஷ்மீர் மாணவர்கள் பரிதவிப்பு
1 min read
1,100 Kashmiri students stranded in Iran’s red zone
3.3.2026
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்குதல் நடத்தியதில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதேபோன்று 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ஈரானில் 1,100 காஷ்மீர் மாணவர்கள் சிக்கி பரிதவித்து வருகின்றனர். ஈரானின் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகள் சிவப்பு மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனால், அப்பகுதியில் தொலைதொடர்பு சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்த பகுதியில் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களால் வெளியேற முடியாத நிலையும் காணப்படுகிறது. இதனால், உடனடியாக மாணவர்களை பாதுகாப்பாக மீட்க அல்லது வேறு இடங்களுக்கு அவர்களை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுபற்றி மாணவ மாணவிகள் பெற்றோரிடம் பேசும்போது, சில ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்ட சத்தம் கேட்டது. ஒரு சில ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கும் சத்தமும் கேட்டது என கூறி அதிர்ச்சி அடைய வைத்தனர். இதனால் நிச்சயமற்ற சூழல், அச்ச நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியே செல்ல கல்வி மையங்கள் அனுமதிக்காத நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது என மாணவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.