புதிய டயர் தொழிற்சாலை – தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம்
1 min read
New tire factory – MRF Company signs agreement with Tamil Nadu government
4.3.2026
தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்கு, அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்.ஆர்.எப். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொழிற்சாலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைய உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பான நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.எப். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மே.எம்.மாம்மென், துணை தலைவர் அருண் மாம்மென், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக எம்.ஆர்.எப். நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன டயர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கான ‘கிரீன்பீல்ட்’ உற்பத்தி வசதியை அமைப்பதற்கு வசதியாக, எங்கள் நிறுவனம் இன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.