June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பயிர்க் கடன் தள்ளுபடி, கல்விச் செலவு- விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்

1 min read

Crop loan waiver, education expenses – Vijay’s election promises

4.3.2026
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். முன்னதாக வேலூரில் அவர் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

அதன்படி இன்று 2-ம் கட்ட வாக்குறுதிகளாக அவர் அறிவித்தது,

“நம் ஆட்சி அமைந்ததும் டெல்டா விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும் 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடனை 50% வரை ரத்து செய்வது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

திமுக போல பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் வெளிப்படையாகச் சொல்வோம்.

2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும்.

விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களும் கொண்டுவரப்படாது, மத்திய அரசின் அழுத்தம் இருந்தாலும் தவெக அதனை முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக நிற்கும்.

கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை நம்முடைய அரசு பார்த்துக்கொண்டு இருக்காது. போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ நெல்மூட்டைகள் ஏற்றி இறக்குவதற்கோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். கமிஷன் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.

ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு தவெக உண்மையான அழுத்தம் கொடுக்கும்.

கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர் சாலை பேருந்து வசதி என அடிப்படை விஷயங்களுக்கு நம் அரசு முக்கியத்துவம் கொடுக்கும்

பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கு நம் அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.

அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி தனியார் வேலைவாய்ப்புகளுக்கான உத்தரவாதமும் உருவாக்கப்படும்” .

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *