அசாமில் 3 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்
1 min read
3 opposition MLAs join BJP in Assam
5/3/20-26
அசாமில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூன்றுபேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். கடந்த மாதம் அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா பா.ஜ.க.வில் இணைந்தநிலையில், இந்த விலகல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த கமலக்யா தே புர்கயஸ்தா (கரீம்கஞ்ச் வடக்கு), வசந்தா தாஸ் (மங்கல்தோய்) மற்றும் சசிகாந்த தாஸ் (ரஹா) ஆகிய மூவர் உட்பட ஐந்து பேர் இன்று மத்திய அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா முன்னிலையில், மாநில பாஜக தலைவர் திலீப் சைகியாவால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
காங்கிரஸில் இருந்து விலகி தற்போது பா.ஜ.க. முதலமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படும் இந்த மூன்று பேரும் கடந்தசில ஆண்டுகளாகவே வெளிப்படையாகவே பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இது காங்கிரஸிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் தனது முதற்கட்ட 42 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.