திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை – ஆதவ் அர்ஜுனா பேச்சு
1 min read
Rajinikanth did not enter politics because of DMK threats – Adhav Arjuna’s speech
12.3.2026
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஆனால் அதே திமுக குடும்பம் ரஜினிகாந்திற்க்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்து கொண்டனர். இன்று என்ன ஆனது.. கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்க போய்விட்டார்.
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை.. விஜய்யிடம் இருக்கிறது.. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. கரூர் சம்பவத்திற்கு பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம்.. தனிப்பட்ட விமர்சனங்கள் முன் வைத்த போது வீட்டில் அமைதியாக உட்காரவில்லை பயந்து கொண்டு.மகளிர் தினத்தன்று 12 வாக்குறுதிகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மாற்றம் உருவாக வேண்டும் என சொன்னவர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி ஆரம்பிக்கும் போது திமுகவின் பல பிரச்சினைகளை எதிர்கொண்டார். இன்னைக்கு 4 சீட்க்கு விலைபோகிவிட்டார். 2014 திமுகை கடுமையாக விமர்ச்சித்தார் அண்ணன் திருமா அவராலையும் முடியவில்லை. கடைசியில் அவர்கள் கூட்டணிக்கு சென்றுவிட்டார். அண்ணன் கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும்போது டிவி எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைச்சார்.
ஆனால் அவராலையும் முடியவில்லை. அவரை சிறுமைபடுத்தவில்லை மறுபடியும் ரெட் ரெயிண்ட் இணைந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஓபிஎஸ் அண்ணன் முதல்-அமைச்சராக இருந்தவர். அம்மா ஜெயலலிதாவின் விசுவாசி இன்னைக்கு ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துவிட்டார். அப்படி அவர்களின் பண பலத்தை பாருங்கள். எல்லாரையும் விலை கொடுத்து வாங்கலாம். எல்லாரையும் மிரட்டலாம். மிரட்டமுடியாத, பணம் கொடுத்து வாங்க முடியாது ஒரே தலைவர் என்றால் அது தவெக தலைவர் விஜய் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்ற வேலூர் மாவட்டச் செயலாளர் சோழிங்கநல்லூர் ரவி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
“ரஜினிகாந்த் அவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே… கொரோனா வைரஸ் தீவிரமாய் பரவிய நிலையில், அச்சமயம் கூட்டம் சேர்ப்பதினால் மக்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தவிர்க்கவும் அரசியலில் இருந்து அவர் விலகினார். மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல; தனது பலத்தை நிரூபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை.
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது. தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும், பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும் அதனை தாங்கி கொண்டு மக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தார். அது தான் அவரின் மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்…
பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.