June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுகவில் இணைந்தார் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி காளியம்மாள்

1 min read

Former Naam Tamilar Party executive Kaliammal joins AIADMK

13.3.2026
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று (மார்ச் 13) இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த போது குறுகிய காலத்தில் காளியம்மாள் பிரபலம் அடைந்தார். இவர் 2019, 2024ல் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 2021ல் சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டார்.

2024ல் நடந்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் கட்சியில் இருந்து விலகினார். பிறகு அவருக்கு வலை வீசி, கட்சியில் இணைக்க திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பேச்சு நடத்தின.

ஆனால், எந்த கட்சியிலும் சேராமல் அமைதி காத்த காளியம்மாள், சென்னையில் இன்று (மார்ச் 13)அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ சந்தித்து கட்சியில் இணைந்தார்.

பிறகு நிருபர்கள் சந்திப்பில் காளியம்மாள் கூறியதாவது: அரசியல் கட்சியில் இருந்து விலகி, ஒராண்டுக்கு மேல் மக்கள் அரசியலில் இருந்தேன். இன்று அரசியல் பயணமாக அதிமுகவில் இணைந்துள்ளேன். இந்த தேர்தலில் தொடங்கி மீண்டும் எனது அரசியல் பயணம் தொடரும். நான் அதிமுகவை தேர்வு செய்ததுக்கு 2 காரணங்கள் உள்ளது. அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு எளிய குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறார்.
ஜனநாயக சூழல் இருப்பதால் அதிமுகவை தேர்வு செய்து இருக்கிறேன். ஒரு தமிழனின் தலைமையின் கீழ் இயங்க அதிமுகவில் இணைந்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த முடிவை நான் தனித்து எடுக்கவில்லை. இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையில், மக்கள் தினமும் பிரச்னைகளை சந்தித்து கொண்டே இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வில் தொடங்கி, சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் நிறைய பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்கான பரிசை வரும் தேர்தல் தரும். முடிவு எடுப்பதில் ஏதும் தாமதம் ஏற்படவில்லை. நான் மக்கள் களத்தில் இருந்தேன். அரசியல் கட்சியில் இருந்து விலகினேன். மக்கள் அரசியலில் இருந்து விலகவில்லை. ஓராண்டு காலமாக அரசியல் களத்தில் இருந்து விலகியதற்கு காரணம் ஓய்வு தேவைப்பட்டது.
எனது குழந்தைகளுடன் நேரம் செலவிட விரும்பினேன். 2010ம் ஆண்டில் இருந்தே இபிஎஸ்ஐ தெரியும். 2010ல் அதிமுகவில் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்துள்ளேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கும் வரை இந்த தவறுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீண்டும் அந்த தவறை செய்யும் போதும் பயம் வரும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு எதிரான குற்றம் சம்பவங்கள் குறையும்.
இவ்வாறு காளியம்மாள் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *