92,700 மெட்ரிக் டன் LPG உடன் இந்தியா வரும் 2 கப்பல்கள் வரும் நாள்
1 min read
Arrival date of 2 ships carrying 92,700 metric tons of LPG to India
15.3.2026
அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.
எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.
ஈரான் அரசாங்கம் அளித்த பாதுகாப்பு உத்தரவாதத்தைத் தொடர்ந்து, ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய 2 கப்பல்கள் பதற்றம் நிலவும் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடற்பகுதிக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், இந்த இரண்டு கப்பல்களும் மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வருகின்றன.
‘ஷிவாலிக்’ கப்பல் மார்ச் 16-ந் தேதி(நாளை), ‘நந்தா தேவி’ கப்பல் மார்ச் 17-ந் தேதியிலும் இந்தியக் கரையை அடையும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு அச்சம் காரணமாக மத்திய அரசு வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியது. சமயல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும், கிராம புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறையில் எல்பிஜி முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.
இந்த சூழலில் இந்த 2 எரிவாயு கப்பலின் வருகை இந்திய மக்களுக்கு நிவாரணமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே பாரசீக வளைகுடா பகுதியில் தற்போது 22 இந்தியக் கப்பல்களில் 611 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.