துபாய் விமான நிலையம் அருகே ஈரான் டிரோன் தாக்குதல்-விமான சேவைகள் ரத்து
1 min read
Iran drone attack near Dubai airport – flight services canceled
16/3/2026
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்பு குழுக்கள் விரைந்தன. தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து எமிரெட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாயில் இருந்து வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்து உள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சில விமானங்கள் அல்மக்தூ சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சென்ற சில விமானங்கள் மீண்டும் திரும்பி வந்தன.
இதே போல ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. டிரோன், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வீடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.