தவறான உறவாக இருந்ததால் காங்கிரசை விவாகரத்து செய்தேன்- தேவகவுடா சொல்கிறார்
1 min read
I divorced Congress because it was an abusive relationship – Deve Gowda says
19.3.2026
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓய்வுபெறும் எம்.பி.க்களுக்கு புதன்கிழமை பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் உரை தமாசாக இருந்தது. சக உறுப்பினர்களை அவர் கலாய்த்து பேசியதை கட்சி பேதமின்றி அனைவரும் ரசித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா பற்றி அவர் பேசும்போது அவையில் சிரிப்பலை ததும்பியது.
“தேவகவுடாவை எனக்கு 54 ஆண்டுகளாக தெரியும். அவரோடு நான் பணியாற்றி இருக்கிறேன். அவர் எங்களை காதலித்தார். எங்கள் மீது பிரியமாக இருந்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ, தெரியவில்லை. பிரதமர் மோடியை திருமணம் செய்து கொண்டார். அது ஏன்? என எனக்கு தெரியாது” என்று கூறினார். அதைக் கேட்டு பிரதமர் மோடி கூட சிரித்து விட்டார்.
இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு தேவகவுடா பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எனது நண்பர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பேசும்போது, என்னை பற்றி மென்மையான இதயத்துடன் சில கருத்துகளை பேசியுள்ளார். அதாவது நான் காங்கிரசுடன் காதலில் இருந்ததாகவும், இறுதியில் பிரதமர் மோடியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நான் காங்கிரசுடன் கட்டாய திருமணத்தில் இருந்தேன். அது தவறான உறவாக இருந்ததால் காங்கிரசை விவாகரத்து செய்தேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.